Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Friday, 27 January 2012

துக்ளக் தர்பாராகும் ஜெ மந்திரி சபை

நேற்று நடந்த மந்திரிசபை மாற்றத்தின் படி  அ.தி.மு.க., அமைச்சரவையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக எம்.எல்.ஏ.,க்கள் சிவபதி, முக்கூர் சுப்ரமணியன் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

 
 
வாரத்துக்கு ஒருமுறை ஞாயிற்று கிழமை , 30 நாளுக்கு ஒருமுறை அம்மாவாசை மாதிரி மாற்றப்படும் செல்வி.ஜெயலலிதாவின் அமைச்சரவை மக்கள் மனதில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைவிட, இந்த மாதிரியான மாற்றங்கள் அமைச்சர்களை எப்படி மக்கள் பணியாற்ற வைக்கும்,  துறை ரீதியான ஞானம் பெற எத்தனை காலம் பிடிக்கும் , ஆட்சி அமைத்து 9  மாதங்கள் ஆகியும் இன்னும் நிர்வாக ரீதியாக இந்த அரசு இன்னும் நிலைபெறாமல் இருப்பது தமிழகத்தின் நலனை எவ்வாறு பாதிக்கும் என்கிற கவலையோ, எண்ணமோ துளியும் இன்றி இப்படி துக்ளக் தர்பார் போல மந்திரிகளை மாற்றுவது ஏன் என்று யாருக்கும் தெரிவதில்லை,  அதை பற்றிய அறிவிப்பும் அரசு வெளியிடுவதில்லை. ஆனால் இங்கு நடப்பது மக்களாட்சி. 


ஏற்கனவே இதுமாதிரியான நிர்வாக நிலையின்மையால் தாண்டவமாடிய தானே புயலின் பாதிப்பிலிருந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் கடலூர் பண்ருட்டி , நெய்வேலி மக்கள் மீளமுடியாமலும் அடிப்படை  வசதியின்றியும்  தவிதவித்து வருகின்றனர். இந்த பாதிப்பின் தன்மையையும் கோரத்தையும் முப்பது நிமிட பயணத்தில் அறிந்து கொண்டார் (?) நம் முதல்வர் .

இதில் இன்னுமொரு விஷேச செய்தி இப்போது அமைச்சராக பதவி ஏற்கவிருக்கும் திரு.சிவபதி ஏற்கனவே, அமைச்சராக இருந்து பின் நீக்கப்பட்டவர் , அவர் நீக்கப்பட்டதன் தகுதி குறைவென்ன ?  சேர்க்கப் பட்டதென் தகுதி நிறை என்ன? யாரும் அறியார் . மாற்றம் ஒன்றே மாறாதது சரிதான் ஆனால் மாறிக்கொண்டே இருப்பது ஒரு நிலையான நல்லாட்சியின் அறிகுறியல்லவே ?  

களை எடுத்தல் அவசியம்தான் ஆனால் களைஎடுத்தலே விவசாயம் (நிர்வாகம்)  அல்ல , இன்னும் இதில் விதைதவரின் தவறும் இருக்கிறது. சிறந்த விதையை விவசாயி தேர்ந்தெடுப்பதைப் போலே நல்ல அமைச்சரவை சகாக்களை தெர்தெடுப்பதும் முதல்வரின் முதல் கடமை , இனியாவது இவர்களாவது நிலைத்திருக்கட்டும்.    

அன்பன் 
ARR

Sunday, 22 January 2012

அ தி மு க வை உடைக்கும் (சசிகலா) நடராஜன்





ஒவ்வொரு வருடமும் தஞ்சையில் பொங்கல் விழாவை வெகு விமரிசையாக நடத்தும் நடராஜன் ஒன்று ஆளும் கட்சியாக இருப்பார் இல்லை என்றால் எதிர்க் கட்சியாக இருப்பார் ஆனால் இந்த முறைதான் எந்த கட்சியும் இல்லாத நொந்த கட்சிக் காரராக இந்த விழாவை நடத்தி முடித்திருக்கிறார்.


விழாவிற்கு சுவாரசியம் கூட்டவோ அல்லது தன் இருப்பை காட்டவோ வழக்கம் போலவே வாய் சொல்லில் வீரம் காட்டியிருக்கிறார், தன்னை முடிவெடு தலைவா, என தன் கோடிகணக்கான தொண்டர்கள் ஆர்ப்பரித்து கேட்பதாகவும், தான், எப்போது முடிவெடுக்காது இருந்தேன் என்றும் நான் (நடராஜன்) முடிவெடுத்ததால் தான் ஆட்சியே மாறியதென்றும் விட்டு விளாசி இருக்கிறார்.தன் மனைவி சசிகலா சம்பந்தமான வழக்கு நீதி மன்றத்தில் இருப்பதால் அமைதியாக இருப்பதாகவும் இல்லையெனில் தன்னுடைய நடவடிக்கைகள் வேறுவிதமாக இருக்கும் என ஆவேசப்பட்டு இருக்கிறார்


இன்னும் உறுதி செய்யப்படாத செய்திகளின் படி இவரிடம் 90  எம் எல் ஏ கள் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் பெங்களூரு வழக்கு அவருக்கு எதிராக அமையும் பட்சத்தில் அ தி மு க வை உடைத்து ஆட்சி அமைக்க போவதாக செய்தி உலவுகிறது. எனக்கு செல்வி ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லை என்றாலும் அ தி மு கவின் ஒற்றை சொல் மந்திரம் அவர், யாராலுமே அவரை தவிர வேறுயாரையுமே நினைத்துப் பார்க்கமுடியாத தலைவி அவர், அவரை தவித்து அ தி மு க என்பது நிலைபெறாத நினைக்க கூட  முடியாத நிகழ்வு. சசிகலாவும் சரி அவர்தம் உறவினர்களும் சரி, திரு நடராஜன் உட்பட ஜெயலலிதா என்கிற சூரியனால் மலர்கின்ற....... மணக்கின்ற  மலர்களே அன்றி சுயம் இல்லாதவர்கள் என்பது என் கருத்து . 

ஆகையால் இவர்கள் பேசுகின்ற பேச்சுகள் பத்திரிகை களுக்கும் , அவரை அண்டி பிழைப்பவர்களுக்கும் பயனளிக்குமே தவிர கதைக்கு உதவாது என்பது திண்ணம் .

அன்பன்
ARR      

    

Wednesday, 18 January 2012

அன்னா ஹசாரே காகித காந்தியா ??? பெரிய பூஜ்ஜியமா ???

                          சமீப காலமாக எல்லோராலும் உச்சரிக்கபடும் ஒரு பெயர் அல்லது நம்பிக்கை வார்த்தை அன்னா ஹசாரே, இந்தியாவின் தலை எழுத்தையே தலை கீழாக மாற்றும் சக்தி கொண்ட மாமனிதராக மீடியாக்களாலும் அவரது ஆதரவாளர்களாலும் உருவகப் படுத்தப் பட்டவர், இன்று மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக தன்னை நிலைப் படுத்திக் கொண்டுள்ளாரா என்று பார்த்தால் அவர் அதில் தோல்வி அடைந்தவராகவே என்னால் அறியப்படுகிறார். 


                         தன்னை காந்தியவாதியாக மக்களின் முன் காட்டிக்கொள்ளும் அன்னா தன்னை முழுமையான காந்தியவாதியாக நிலை நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை என்பதே என் பதில் , தன் ஊரில் குடிப்பவர்களை மரத்தில் கட்டி அடிப்பேன் என்று கூறிய போதே அவரின் அகிம்சை அழிந்து போனது , இன்னும் சற்று விரிவாக அரசியல் ரீதியாக இவரின் செயல்பாடுகளைப் பார்த்தோமேயானால் , இத்தனை ஊழல்களுக்கு பிறகும் மக்கள் விரோத செயல்களுக்கு பிறகும் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக்கம் இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதற்கு காரணங்கள் 
  • சுதந்திர போராட்டத்தின் காரணியான கட்சி 
  • கதராடையும் காந்தி குல்லாவும்
  • தேசியக்கொடி மாதிரியான கட்சிக் கொடி
  • காந்தியம்....................... இவை அனைத்தையும் பின்பற்றாவிட்டாலும் தன் முழுமையான சொத்தாக பாதுகாத்து வருவதுதான்  
           இதை கைபற்ற முடியாமல் போனவர்களின் ஊதுகுழலாக இவர் செயல் பட்டு இருக்கலாம் என்பது என் எண்ணம் . நான் முன்னமே என் பதிவில் பதிந்த படி ஐரோம் ஷர்மிளாவிற்கு கொடுக்காத முக்கியத்துவத்தை அன்னா ஹசாரேவிற்கு கொடுப்பதன் வியப்பை வெளிப்படுத்தி இருந்தேன் , ஏனெனில் ஊழலை அழிப்பதை விட உரிமையை பெறுவது மிக முக்கியம் இன்னும் அவசியம்.  

         ஜனநாயகத்தை பற்றி பேசும் இவரின் குழுவினரே அன்னாவின் மீதான தனி மனித துதியை தொடங்கியதுதான், இதற்கு அடையாளமாக பல நிகழ்வுகளை சொல்லலாம். இதற்கு சாட்சியாக கீழ் உள்ள படத்தைக் கொள்ளலாம்.
  

         ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனாலும் ஊழல் என்பது காங்கிரஸ் காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல லோக்பால் மசோதா முழுமையாக நிறைவேறாமல் போனதற்கு காரணம் அவர்களே, காங்கிரஸ் காரர்களே என் முதல் முழு எதிரி அவர்களை எதிர்த்து ஐந்து  மாநிலங்களிலும் களம் காணுவேன் என்று சொல்லியதும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கேள்விகளை தவிர்த்து புறக்கணித்ததும் பூனைக்குட்டி வெளியே வந்த கதையைத்தான் நினைவுப் படுத்தியது. 

        அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவரா இல்லை மற்றக் கட்சிகளின்   ஊதுகுழலானவரா என்பது அவரின் கடந்த கால செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இனிவரும் காலங்கள் அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்தே தெரியவரும்.    

அன்பன் 
ARR

Friday, 13 January 2012

சசிகலாவின் நீக்கமும்? அதன் காரணமும்?

இது எல்லோரும் எழுதி தீர்த்த விஷயம் தான் என்றாலும் எனக்கு இதில் மற்றவர்களைவிட சற்றே கூடுதலான உரிமை உண்டு காரணம் நான் மன்னையின் மகன் என்பதால்.............



                               சசிகலாவின் நீக்கத்தின் நோக்கம் இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது , அதன் காரணத்தை இன்றுவரை ஜெயலலிதா சொல்லவில்லை , அது அவசியமா இல்லை அவரின் தனிப்பட்ட விஷயமா என்று பார்த்தோமேயானால் ஜெ அவரை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றி இருந்தால் அது அவரின் தனிப்பட்ட விஷயம் ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பாக சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சியை விட்டு வெளியேற்றும் போது அதற்கான காரணத்தை, அவர் அவரின் தொண்டர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும் ஆனால் வழக்கம் போலவே இதிலும் மர்மம், மௌனம் 

அதோடு சேர்த்து இதுவரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏற்பட்ட குற்றங்களுக்கும் , ஊழல்களுக்கும் , தவறுகளுக்கும் சசிகலாவே முழு பொறுப்பு என்பது மாதிரியான செய்திகள் பத்திரிக்கையின் வாயிலாக பரப்ப படுவது சரியல்ல என்பது என் கருத்து , அதே வேளையில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கமும் , அராஜகமும் அந்த கட்சியில் இல்லை என்று சொல்லவோ அதை நியாயப்படுத்தவோ இல்லை இந்த பதிவு , ஆனால் அந்த தவறுகளுக்கு ஜெயலலிதாவும் பொறுப்பு என்பதுதான் என் கருத்து. 

                                      
                                       இதில் ஜெயலலிதாவிற்கு பொறுப்பு இல்லை சசிகலாவே முழு காரணம் என சொன்னால், ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவி , மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் பதவில் இருப்பவர் சசிகலா என்ற ஒற்றை மனுஷிக்கு அடிமையாக இருந்தார் என்றல்லவா அர்த்தம், இதற்கு முன் சசிகலாவை பற்றியும் அவர்தம் குடும்பத்தை பற்றியும் யாரும் குறை கூறவோ குற்றம் சொல்லவோ இல்லையா என்ன ? அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் வந்ததென்றால் அதன் காரணம் என்ன ?. அதற்கான காரணம் பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கும் அதன் பின் இடப்பட்ட திட்டங்களும் என்றால், மற்றவர்களுக்கு பங்கம் என்றால் அமைதியாக இருக்கும் ஜெயலலிதா தனக்கு ஆபத்து என்றால் ஆவேசப்படும் சுயநலவாதியா என்ன ?

                                                இதுநாள் வரை சசிகலா பெற்ற பயன்களை அவரின் தவறுகளை சொல்பவர்கள் ஜெயலலிதா விற்காக அவர் பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் பட்டியலிடாததேன்?என்னமோ சசிகலாதான் எல்லாக் குற்றங்களையும் செய்தவர்மாதிரியும் ஜெயலலிதா தவறே செய்யாதவர் மாதிரியும் மாயையை உருவாக்குவது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை , அப்படியே இது உண்மையாக இருந்தாலும் அவரின் தவறுகளை தடுக்காது இருந்த ஜெயலலிதாவும் குற்றம் செய்தவர்தானே ? அதை சசிகலா வை குறை சொல்பவர்கள் வசதியாக மறந்ததேன் ? 


 சசிகலா மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நீக்கத்தால் ஜெயலலிதாவின் தவறுகளை மறைக்க முடியாது, என்பதே என் கருத்து, இது அரசியலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியதே தவிர வேறு எந்த மாற்றமும் மக்களுக்கு நிகழ்ந்து விடப்போவதில்லை. இதற்கு ஜெயலலிதாவின் புயல் நிவாரண கடலூர் ஹெலிகாப்டர் பயணமே சாட்சி , இதைப் பற்றி பின்னொரு பதிவில் .    

                               இந்த பதிவை ஒரு மாற்று கருத்திற்காகவும், என்னுடைய மனதில் தோன்றிய கேள்விகளுக்காகவும் பதிந்தேனே அன்றி இன்றுவரை நான் மன்னார்குடியில் இருந்து வந்திருந்தாலும் அவரின் குடும்பத்தினருடன் ஒரு வினாடி தொடர்பும் இல்லாதவன் , இந்த பதிவை படித்து நான் அவர்தம் குடும்பத்தால் பயன் பெற்றவனாக நீங்கள் கருதினால் நான் பொறுப்பல்ல .
                                         நன்றி !

அன்பன் 
ARR                     

Saturday, 31 December 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

காலம் பல  அருமையான வாழ்க்கை தத்துவத்தை நமக்கு எப்போதுமே சொல்லி செல்கிறது . 
  • காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
  • காலம் தன் தலைமையை தானே தேர்ந்தெடுக்கிறது
  • காலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது 
  • தன்னை மதிக்காதவர்களைப் பற்றி கவலைபடுவதே இல்லை 
  • மதிப்பவர்களை தன்னுடனே அழைத்து செல்ல தவறுவதில்லை 
  • நிலையாமையே நிலை என்ற நிதர்சனத்தை நிரந்தரமாக்கி கொண்டுள்ளது 
  • எல்லா மாற்றங்களிலும் மாறாதிருக்கிறது 
  • உள்ளவரை உழைத்துக் கொண்டே இருக்கிறது 
  • பயனை மற்றவர்களுக்கு தர தயாராக இருக்கிறது எப்போதும் எங்கேயும்
இது போல் இன்னும் எத்தனையோ அனுபவப் பாடங்களை தந்து போகிறது காலம் 

நாளை முதல் ஒரு புது காலத்தில் நுழையும் நண்பர்களுக்கும் , அவர்தம் குடும்பத்தினர்  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

அன்பன்
ARR  


Saturday, 3 December 2011

கனிமொழிக்கு கட்சி பதவி தேவையா? அவசியமா?

                             

  நேற்று நீண்ட நாட்களாக சிறையில் இருந்த திருமதி.கனிமொழி சென்னை வந்தார், தி மு க வின் அனைத்து மட்ட தலைவர்களும் விமான நிலையத்திலும் , அவரது வீட்டிலும் திரண்டிருந்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.அவரை வரவேற்று விமான நிலையத்திலிருந்து அவரின் வீடு வரை ஒரே போஸ்டர் மயம், அதில் கண்டுள்ள வாசகங்கள் அவரின் சிறை வாழ்க்கை வ.உ.சி யையே பின்னுக்கு தள்ளியது.

 

                                    சரி இப்போது , நம் பதிவு எதை பற்றியது கனிமொழிக்கு பதவி கொடுப்பது அவசியமா? என்பதுதான். மாறன் சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்பட்ட பின்புதான் கனி மொழிக்கு அதிகாரபூர்வ அங்கிகாரம் கொடுக்கப்பட்டது, தில்லியில் நம்பிக்கைக்கு உரிய நபராக இவர் வலம் வர மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகே கட்சியில் இவரின் முக்கியத்துவம் படிப் படியாக அதிகமானது. முன்னாள் அமைச்சர் ராசா தொலை தொடர்பு அமைச்சராக இவரது ஆதரவும் முக்கியமானதாக சொல்லப்பட்டது, இதனாலேயே இவருக்கும் மாறன் சகோதரர்களுக்கும் பிரச்சனை ஆனது. 

                                        நான் முன்பே என்னுடைய மற்றொரு பதிவில் சொன்னபடி

(கனிமொழி சிறையில்.... கலைஞர் கண்ணீர்....)

இன்று கனிமொழிக்கு ஏற்பட்ட நிலைக்கு அவரின் தாயார் ராஜாத்தி அம்மாளே காரணம், அவரின் ஆசையினாலும் தூண்டுதலினாலுமே அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டது, அதுவரை கனிமொழி நல்ல கவிஞராக இலக்கியவாதியாகவே எல்லாராலும் அறியப்பட்டார், அவர் தொடங்கிய வேலை வாய்ப்பு முகாம்கள் படித்த பட்டதாரிகளுக்கு வேலையும் வாழ்க்கையையும் பெற்றுத் தந்ததை யாராலும் மறுக்க முடியாது.

                 இன்னும் அவருக்கு கட்சியில் முக்கியத்துவத்தை அதிகப் படுத்தினால் அது அவருக்கும் கட்சிக்குமே பிரச்சனையாக முடியும், ஏற்கெனவே ஸ்டாலின், அழகிரி என இரு பிரிவாக செயல் படும் கட்சி இனி மூன்று பிரிவாக ஆவதற்கான வழிவகையாகவே இது அமையும். அதையும் தொடர்ந்து இது கனிமொழிக்கு பல பிரச்சனைகளையே தரும்.

                            இதுவரை கனிமொழியில் சிறையில் இருந்தவரை, அவர் திடமாக எதிர்கொண்டதாக சொல்லப்பட்டாலும், அவரின் தாயும் தந்தையும் உருகி துடித்ததை யாராலும் மறுக்க முடியாது , பெண் என்றும் ஒரு குழந்தைக்கு தாயென்றும் பாராமல் சிறையில் அடைத்திருக்கிறார்களே என்று பேசியவர்கள் இன்று அவருக்கு கட்சி பதவி கேட்பதில் துளியும் நியாயம் இல்லை. இது ஒரு நல்ல தாயை, மனிதாபிமானம் உள்ளவரை, இலக்கியவாதியை குழப்பும் செயலாகவே அமையும்.

                            இனி கனிமொழி இந்த வழக்கை நல்ல முறையில் எதிர்கொண்டு, ஒரு நல்ல தாயாக, கவிஞராக, இலக்கியவாதியாக, நாட்டுப்புற கலைகளை வளர்ப்பவராகவே இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மற்றவைகளின் ஆசைக்காகவும், பதவி மோகத்திற்காகவும் இவர் தன் வாழ்க்கையை பலியிடக்கூடாது என்பதும் என் விருப்பம்.ஏனெனில் இவரின் மனிதாபிமானம் திஹார் சிறையில் உள்ள குழந்தைகளும் அறிவார்கள்.இது மாதிரியான பண்புகளை எந்த ஆட்சி மாற்றத்தாலும் இவைகளை தடுக்கமுடியாது.


 நிறைவாக.., கனிமொழியை பற்றியும், அவரின் அரசியல் எதிர்காலத்தையும் பற்றி சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் அவரின் நலனில் உண்மையான உரிமையுள்ள அவரின் கணவரை பற்றியும் அவரின் பிரிவால் துடித்த மகனின் எண்ணத்தை பற்றியும் கவலைபட்டதாக தெரியவில்லை. திருமதி.கனிமொழி  சமூக அக்கறையுள்ள ஒரு குடும்பத்தலைவியாக காணவே நடு நிலையாளர்களின் விரும்புகிறனர், என் விருப்பமும் அதுவே.

பட உதவி: தினகரன், தி ஹிண்டு

அன்பன்
ARR

Tuesday, 19 July 2011

அன்பானவர்களுக்கு வணக்கம்



 என் மிகப் பிரியமானவர்களுக்கு, வணக்கம்
நலம் நாடுவதும் நலமே...............
          இப்போது என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை கடந்து கொண்டிருப்பதால், என்னால் முன்பு போல வலைப்பூவில் செயல் பட முடியாமல் போகின்றது, அதன் காரணமாகவே உங்களின் உன்னத படைப்புகளை படித்தும் பின்னூட்டமிட முடியாமல் என் வாக்கினை பதிய முடியாமல் போகின்றது. நீங்கள் அனைவரும் என்னை தயை கூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.வெகு விரைவில் நான் மீண்டும் மீண்டு வந்து உங்களின் அன்பு ஜோதியில் ஐக்கியமாவேன்.


அன்பு, நன்றி , நலம்,வணக்கம்
 
அன்பன்
ARR .        

Monday, 11 July 2011

தமிழ்மணம் பதிவுப்பட்டை அறிவிப்புகள் (TOOL BAR)


தமிழ் மணம் காணாது தவிக்கும் தமிழ் மனங்களுக்கு ஓர்  அறிவிப்பு, நான் பெற்ற  இன்பம் பெருக இவ் வையகம் (நன்றி நாற்று நிரூபன் , அவர் செய்தியாக சொன்னதை நான் பதிவாக போட்டுட்டேன் )

வலைப்பதிவுகளில் எழுதப்படும் இடுகைகளை உடனுக்குடன் தமிழ்மணத்திற்கு அளிக்கவும், மறுமொழிகளை உடனுக்குடன் திரட்டவும், வாசகர் பரிந்துரைக்காக வாசகர்களிடம் இருந்து வாக்குகளை திரட்டவும் பதிவுப்பட்டைச்சேவையை தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே வழங்கி வந்துள்ளோம். உடனுக்குடன் மறுமொழிகளும், இடுகைகளும் வலைப்பதிவுகளில் இருந்தே ஒரு சொடுக்கிலே தமிழ்மணத்தின் முகப்பிற்கு வந்தடையும் தொழில்நுட்பம் தமிழ்மணத்தின் சிறப்பம்சமாகவும் இருந்து வந்துள்ளது.
ஆனால், இன்றைக்கு வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் ஒவ்வொரு வலைப்பதிவும் வாசிக்கப்படும் பொழுதும் பதிவுப்பட்டை சேவை தமிழ்மணத்தின் வழங்கிக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. அது தவிர வலைப்பதிவுகளிலே தரவிறக்கமும் தாமதமாகிறது. இப்பிரச்சனை தமிழ்மணம், வலைப்பதிவர்கள் என அனைவரையும் பாதிக்கும் நிலையில், இச்சேவையை இடைநிறுத்தத் தமிழ்மணம் நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கின்றது.
இச்சேவையில் உள்ள பிரச்சனைகள் களையப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்ட சேவை வரும் வரையில் வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் திரட்டுதல் போன்ற சேவைகள் இயங்காதெனத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இந்த சேவைகள் மீண்டும் செயற்படத் தொடங்கும்.
இதனால், பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி
நிர்வாகம்
தமிழ்மணம்