துணை செய்தி : சென்ற முறை நானிந்த தொடரை முடித்த விதம் எனக்கே பிடிக்கவில்லை , இந்த ஆன்மீக அனுபவத்தை தொடர்கதை போல பாவித்து முடித்திருந்ததை மாதிரி உணர்கிறேன், தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
போனை எடுத்த எனக்கு என் மனைவியிடம் இருந்து நல்ல செய்தியே வந்தது , என் மகள் இன்று வெயிட் ஏறவும் இல்லை இறங்கவும் இல்லை, அதை கேட்ட நான் சற்றே நிம்மதி அடைந்தேன், காலையில் எழுந்த நாங்கள் நடக்க தொடங்கினோம், காலையில் வடமால்பேட்டில் உணவு , பின் அங்கிருந்து நடக்க தொடங்கினோம், நடக்க தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் கண்களில் திருச்சானூர் கோபுரம் பட , ஆஹா என்னே ஒரு நிம்மதி மனதில், வாழ்க்கையில் அதுவரை அனுபவித்திராத திருப்தி எத்தனையோ முறை அந்த கோபுரத்தை பாத்திருந்தாலும் இந்த முறை இருகரம் கொண்டு என்னை அழைப்பதாகவே தெரிந்தது , என் கவலையெல்லாம் பறந்தது போன மாதிரி ஒரு இன்பம் ,தாய்பசுவை நோக்கி ஓடும் கன்றினைப்போல் எனை அறியாமல் வேகமாக நடந்தேன் , என் நண்பர்கள் என் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக வந்தனர்.
அலமேலு மங்காபுரத்தில், பத்மாவதி தாயார் இருக்கிறார். இவளை, “அலமேலு’ என்பர். “அலர்மேலு’ என்பதே சரியான வார்த்தை. “அலர்’ என்றால், “தாமரை!’ “மேலு’ என்றால், “வீற்றிருப்பவள்!’ இதையே, “பத்மாவதி’ என்கின்றனர். “பத்மம்’ என்றாலும், “தாமரை!’ “வதி’ என்றால், “வசிப்பவள்!’ ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள்.என் மகளின் பெயரும் அதே அர்த்தம் கொண்டதுதான் "கமலாத்மிகா"
கமலத்தில் வீற்றிருப்பவள் என பொருள்படும்.
தாயே என் துணை நீயே
கோவிலில் நுழைந்த எனக்கு உள்ளமெல்லாம் மகிழ்ச்சி, என் துயர் துடைக்க காத்திருக்கும் அந்த தெய்வ தாயாரை கண்குளிர பாக்க போகிறேன் , என் துயரையெல்லாம் கொட்டி தீர்க்க போகிறேன் என்ற ஆவல் என்னை அப்படியே அள்ளிச்சென்றது,வரிசையில் நின்று அன்னையை கண்குளிர,மனம்நிறைய,கண்ணீருடன் சேவித்தேன் என் மகளை அவளிடம் ஒப்புவித்தேன், தாயாரின் அந்த பார்வையில் நானிருக்கிறேன் உனக்கு என சொல்லாமல் சொல்லியது போன்றதொரு தெய்வீகப்பார்வை, தாயாரின் திவ்ய தரிசனம் முடித்து வெளியே வந்தேன், மனமெல்லாம் அப்படி ஒரு திருப்தி, அதை என்னால் சொல்லில் சொல்ல முடியாத ஒரு உன்னதம், என் சோகத்தையெல்லாம் துடைத்து எடுத்தது போன்றதொரு எண்ணம் , அந்த கணம் கவலையெல்லாம் என்னை விட்டு பறந்தோடி பிறந்த குழந்தையை போலே உணர்ந்தேன் , ஒன்றுமே இல்லாத நிசப்தம் அதில் நீக்கமற நிரந்த நிதர்சனம்.
கோவிலைவிட்டு வெளியே வந்த நான் முழு உற்சாகத்துடன் திருமலையை நோக்கி நடக்க தொடங்கினேன் அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலிப்பிரி அங்கிருந்து தான் ஏழுமலையானின் தெய்வீக திருமலைக்கு நடக்க தொடங்க வேண்டும்
இங்கிருந்து ஒன்பது கிலோமேட்டார் தொலைவில் 3900 படிக்கட்டுகளை கொண்டதுதான் திருமலை,
"ஓம் நமோ நாராயணாய" "ஓம் நமோ நாராயணாய"
"ஓம் நமோ நாராயணாய" "ஓம் நமோ நாராயணாய"
"ஓம் நமோ நாராயணாய" "ஓம் நமோ நாராயணாய"
என்ற கோஷங்கள் விண்ணை எட்ட , நாங்களும் அந்த உயிர் உருக்கும்
"ஓம் நமோ நாராயணாய" "ஓம் நமோ நாராயணாய" என்ற கோஷத்தை சொல்லியபடியே மலை ஏற தொடங்கினோம், ஒவ்வொரு படி ஏறும் போதும் "ஓம் நமோ நாராயணாய" என நாங்கள் மூவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டே ஏறினோம் , ஏறியதே தெரியவில்லை கோவிந்தன் கோஷம் குறை நீக்கி , வலி நீக்கி , துயர் துடைத்து , துன்பம் அழித்து அழைத்து சென்றது எங்களை. வேங்கடவன் அருளாட்சி செய்யும் தெய்வீக திருமலையை , திக்கு தெரியாத என்னிலையை சொல்லி வேண்ட அடைந்தேன் . அந்த கோவிந்தன் என்னை ஆட்கொள்ளுவான் , என் துயரை தூளக்குவான் என்றபடியே அவன் சன்னதியை அடைந்தேன், உள்ளே நுழைந்த எனக்கு ,இந்த அகில லோகத்தையும் காக்கும் அந்த பரந்தாமன் , பரலோக நாயகன் , வாசுதேவன் , கோவர்த்தன் , அச்சுதன் , முகுந்தன் ,ஜகந்நாதன் பரப்ரஹ்மன், ஆஹா திவ்ய தெய்வீக திருமேனி தரிசனம்
என் குறையை எல்லாம் அவனிடத்தில் கொட்டினேன்,நீயே எல்லாம் உன்னிடமே நான் சரணாகதி மும்மூர்த்திகளில் காப்பவனே ,கமலபாதா, ஆதி மத்தியாந்த ரஹிதா, அநாத ரக்ஷகா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா, பரமானந்தா, என் மகளை உன்னிடத்தில் இருந்தே பெற்றேன் , இவள் உன் உடமை அவளை காப்பது உன் கடமை , இனி நீயே பொறுப்பு அவளுக்கு நீயே காப்பு .
கராரவிந்தேந பதாரவிந்தம்
முகாரவிந்தே விநிவேசயந்தம்!வடஸ்ய பத்ரஸ்ய புடே சயாநம்
பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!
எங்கள் ஊர் மன்னார்குடி ஸ்ரீவித்யாராஜகோபாலன் சன்னதியில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான கோபாலனை கையில் ஏளை பண்ணி இந்த சுலோகத்தை தீட்ஷதர் சொல்லுவர் , அது நினைவுக்கு வந்து அதை சொல்லியபடியே வெளியே வந்தேன் . தரிசனம் முடிந்து வெளியே வந்த நான் என் அறைக்கு சென்று என் மனைவிக்கு போன் செய்து குட்டிம்மா எப்படி இருக்கிறாள் என கேட்டபோது, நல்லா இருக்கிறாள் நேற்றைவிட இன்றைக்கு 70 கிராம் வெயிட் அதிகமாயிருக்கிறாள் என்றாள் என் மனைவி , இதை விட என்ன பெரிதாய் தரமுடியும் எனக்கு அந்த தயாநிதி .............................
திருமலை இந்த பூமியில் ஒரு தெய்வீக திருத்தலம் , அந்த இடம் நம்மை தெய்வீகத்தை உணரவைக்கும் , நம்வாழ்வை உயரவைக்கும் . கோடானு கோடி மக்களின் துயர் துடைக்கும் வேங்கடரமணன் என்னை மட்டும் கைவிடவா போகிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே அவன் அருளால் என்னை இதுவரை அழைத்து வந்திருக்கிறது , இன்னும் என் வாழ்க்கை பாதை முழுவதும் அவன் சித்தம் தான் ,நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் சகலமும் அவனுக்கே சமர்ப்பணம் , இது வரை என்னுடன் இந்த தொடரில் தொடர்ந்து வந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த அத்தனை பேரின் பாதம் தொட்டு , இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை பொறுத்து கொள்ள வேண்டி வணங்குகிறேன் நன்றி
"ஓம் நமோ நாராயணாய" "ஓம் நமோ நாராயணாய"
அன்பன்
ARR