நேற்று நீண்ட நாட்களாக சிறையில் இருந்த திருமதி.கனிமொழி சென்னை வந்தார், தி மு க வின் அனைத்து மட்ட தலைவர்களும் விமான நிலையத்திலும் , அவரது வீட்டிலும் திரண்டிருந்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.அவரை வரவேற்று விமான நிலையத்திலிருந்து அவரின் வீடு வரை ஒரே போஸ்டர் மயம், அதில் கண்டுள்ள வாசகங்கள் அவரின் சிறை வாழ்க்கை வ.உ.சி யையே பின்னுக்கு தள்ளியது.
சரி இப்போது , நம் பதிவு எதை பற்றியது கனிமொழிக்கு பதவி கொடுப்பது அவசியமா? என்பதுதான். மாறன் சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்பட்ட பின்புதான் கனி மொழிக்கு அதிகாரபூர்வ அங்கிகாரம் கொடுக்கப்பட்டது, தில்லியில் நம்பிக்கைக்கு உரிய நபராக இவர் வலம் வர மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகே கட்சியில் இவரின் முக்கியத்துவம் படிப் படியாக அதிகமானது. முன்னாள் அமைச்சர் ராசா தொலை தொடர்பு அமைச்சராக இவரது ஆதரவும் முக்கியமானதாக சொல்லப்பட்டது, இதனாலேயே இவருக்கும் மாறன் சகோதரர்களுக்கும் பிரச்சனை ஆனது.
நான் முன்பே என்னுடைய மற்றொரு பதிவில் சொன்னபடி
இன்று கனிமொழிக்கு ஏற்பட்ட நிலைக்கு அவரின் தாயார் ராஜாத்தி அம்மாளே காரணம், அவரின் ஆசையினாலும் தூண்டுதலினாலுமே அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டது, அதுவரை கனிமொழி நல்ல கவிஞராக இலக்கியவாதியாகவே எல்லாராலும் அறியப்பட்டார், அவர் தொடங்கிய வேலை வாய்ப்பு முகாம்கள் படித்த பட்டதாரிகளுக்கு வேலையும் வாழ்க்கையையும் பெற்றுத் தந்ததை யாராலும் மறுக்க முடியாது.
இன்னும் அவருக்கு கட்சியில் முக்கியத்துவத்தை அதிகப் படுத்தினால் அது அவருக்கும் கட்சிக்குமே பிரச்சனையாக முடியும், ஏற்கெனவே ஸ்டாலின், அழகிரி என இரு பிரிவாக செயல் படும் கட்சி இனி மூன்று பிரிவாக ஆவதற்கான வழிவகையாகவே இது அமையும். அதையும் தொடர்ந்து இது கனிமொழிக்கு பல பிரச்சனைகளையே தரும்.
இதுவரை கனிமொழியில் சிறையில் இருந்தவரை, அவர் திடமாக எதிர்கொண்டதாக சொல்லப்பட்டாலும், அவரின் தாயும் தந்தையும் உருகி துடித்ததை யாராலும் மறுக்க முடியாது , பெண் என்றும் ஒரு குழந்தைக்கு தாயென்றும் பாராமல் சிறையில் அடைத்திருக்கிறார்களே என்று பேசியவர்கள் இன்று அவருக்கு கட்சி பதவி கேட்பதில் துளியும் நியாயம் இல்லை. இது ஒரு நல்ல தாயை, மனிதாபிமானம் உள்ளவரை, இலக்கியவாதியை குழப்பும் செயலாகவே அமையும்.
இனி கனிமொழி இந்த வழக்கை நல்ல முறையில் எதிர்கொண்டு, ஒரு நல்ல தாயாக, கவிஞராக, இலக்கியவாதியாக, நாட்டுப்புற கலைகளை வளர்ப்பவராகவே இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மற்றவைகளின் ஆசைக்காகவும், பதவி மோகத்திற்காகவும் இவர் தன் வாழ்க்கையை பலியிடக்கூடாது என்பதும் என் விருப்பம்.ஏனெனில் இவரின் மனிதாபிமானம் திஹார் சிறையில் உள்ள குழந்தைகளும் அறிவார்கள்.இது மாதிரியான பண்புகளை எந்த ஆட்சி மாற்றத்தாலும் இவைகளை தடுக்கமுடியாது.
நிறைவாக.., கனிமொழியை பற்றியும், அவரின் அரசியல் எதிர்காலத்தையும் பற்றி சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் அவரின் நலனில் உண்மையான உரிமையுள்ள அவரின் கணவரை பற்றியும் அவரின் பிரிவால் துடித்த மகனின் எண்ணத்தை பற்றியும் கவலைபட்டதாக தெரியவில்லை. திருமதி.கனிமொழி சமூக அக்கறையுள்ள ஒரு குடும்பத்தலைவியாக காணவே நடு நிலையாளர்களின் விரும்புகிறனர், என் விருப்பமும் அதுவே.
பட உதவி: தினகரன், தி ஹிண்டு
அன்பன்
ARR