Showing posts with label ஆதங்கம். Show all posts
Showing posts with label ஆதங்கம். Show all posts

Monday, 30 January 2012

தரமும் தகுதியும் தாழ்ந்து போன இந்திய கிரிக்கெட் அணி




இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, மிகப்பெரும் தோல்வியையும் அவமானத்தையும் தந்திருக்கிறது நம் இந்திய அணி அல்லது பி சி சி ஐ அணி. ஒவ்வொரு இந்தியர்களின் ரத்தத்திலும், சித்தத்திலும் இரண்டற கலந்து விட்ட கிரிக்கெட் ரசனை ஒவ்வொரு இந்திய வீரரையும் உச்சத்தில் அமர வைத்து அழகு பார்த்தாலும் கொஞ்சமும் பொறுப்பின்றி கிரிக்கெட் விளையாட்டை விளையாட்டாய் விளையாடிய இந்திய அணியை எவ்வளவு விளாசினாலும் தகும்.


இந்த பதிவில் ஒவ்வொரு வீரரின் பேட்டிங், பௌலிங் ஸ்டாடிஸ்டிக்ஸ் சொல்லி என்னையும் உங்களையும் வேதனை படுத்த விருப்பம் இல்லை, தனி வீரரைப் பற்றிய விமர்சனமாகவும் இது இருக்காது. தொடரின் துவக்கத்திலேயே இந்திய அணியை காகித புலிகள் என விமர்சனம் செய்திருந்த ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளின் தீர்க்கதரிசனத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் கொஞ்சம் வெறுத்தாலும் இப்போது அதை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை, அவர்களின் தீர்க்கதரிசனத்தை முழுமையான உண்மையாக்கிய பெருமை நமது வீரர்களையே சேரும்.





ஒவ்வொரு இந்தியனின் விளையாட்டு ஆர்வத்தை பல வழிகளில் பயன்படுத்தி அவனின் உழைப்பை உறிஞ்சி பணமாக்கி உலகத்திலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் போர்டாக தன்னை நிலை நிறுத்தி கொண்டிருக்கும் பி சி சி ஐ, இந்த விளையாட்டை முன்னேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த தோல்விக்கு காரணமாக அவர்கள் சொல்லப்போகும் காரணம் அரதபழசான ஆஸ்திரேலியாவின் ஆடுகளம், இது என்ன யாருமே அறியாத ரகசியமா என்ன?, ஒவ்வொரு முறையும் உதை வாங்கி வரும் போதும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், இந்திய அணியின் தரத்தை தாழ்த்தும் பி சி சி ஐ க்கு அறிவோ? அக்கறையோ இல்லாமல் இருப்பதுதான் இதன் காரணம்.


இவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு அதேமாதிரியான ஒரு ஆடுகளத்தை உருவாக்கி இளம் வீரர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கலாம், கூடுதலாக ஆஸ்திரேலியாவிலேயே ஒரு ஆடுகளம் அமைத்து அங்கு நம் வீரர்களை அழைத்து சென்று முன்னாள் சிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம்.பல நாட்டு சிறந்த ஆடுகளம் மாதிரியான ஆடுகளம் அமைத்து பயிற்சி அளிக்கலாம்,இதற்கு மெக்ராத், டொனால்டு, அக்ரம்,வால்ஷ்,போன்றோர்களை பயன் படுத்தலாம் அவர்கள் கேக்கும் தொகைக்கு அதிகமாகவே நம்மிடம் பணம் உண்டு. இது நம்முடைய பேட்ஸ்மேன்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.


உள்ளூர் ஐ பி எல் மாதிரியான பிற நாட்டு 20 - 20 ஓவர் போட்டிகளில் நம் அணி வீரர்களை விளையாட அனுமதிக்கவேண்டும், இது அந்த நாட்டு ஆடுகளத்தை அறிய ஒரு வாய்ப்பாக அமையும், அப்படித்தானே நம் நாட்டு சுழலையும்,இந்திய வீரர்களின் பலகீனத்தையும் , மித வேக ஆடுகளத்தையும் ஐ பி எல் மூலமாக வெளி அணிவீரர்கள் அறிந்து கொள்கிறார்கள். 


என்னதான் கரடியாக கத்தினாலும் கிரிக்கெட் பார்ப்பதை அதன் ரசிகர்கள் விடப்போவதில்லை, அவர்களும் மாறப்போவதில்லை ( நானும் தான்) இதே இந்திய அணி அடுத்து ஏதாவது ஒரு சிறு வெற்றி பெற்றாலும் கோபம் எல்லாம் வற்றி போய் அவர்களின் புகழ் பாடத்தான் போகிறோம் ஆனாலும் என்னில் பொங்கி வரும் ஆற்றாமையையாவது இந்த பதிவு குறைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு.


அன்பன் 
ARR. 

Friday, 27 January 2012

துக்ளக் தர்பாராகும் ஜெ மந்திரி சபை

நேற்று நடந்த மந்திரிசபை மாற்றத்தின் படி  அ.தி.மு.க., அமைச்சரவையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக எம்.எல்.ஏ.,க்கள் சிவபதி, முக்கூர் சுப்ரமணியன் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

 
 
வாரத்துக்கு ஒருமுறை ஞாயிற்று கிழமை , 30 நாளுக்கு ஒருமுறை அம்மாவாசை மாதிரி மாற்றப்படும் செல்வி.ஜெயலலிதாவின் அமைச்சரவை மக்கள் மனதில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைவிட, இந்த மாதிரியான மாற்றங்கள் அமைச்சர்களை எப்படி மக்கள் பணியாற்ற வைக்கும்,  துறை ரீதியான ஞானம் பெற எத்தனை காலம் பிடிக்கும் , ஆட்சி அமைத்து 9  மாதங்கள் ஆகியும் இன்னும் நிர்வாக ரீதியாக இந்த அரசு இன்னும் நிலைபெறாமல் இருப்பது தமிழகத்தின் நலனை எவ்வாறு பாதிக்கும் என்கிற கவலையோ, எண்ணமோ துளியும் இன்றி இப்படி துக்ளக் தர்பார் போல மந்திரிகளை மாற்றுவது ஏன் என்று யாருக்கும் தெரிவதில்லை,  அதை பற்றிய அறிவிப்பும் அரசு வெளியிடுவதில்லை. ஆனால் இங்கு நடப்பது மக்களாட்சி. 


ஏற்கனவே இதுமாதிரியான நிர்வாக நிலையின்மையால் தாண்டவமாடிய தானே புயலின் பாதிப்பிலிருந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் கடலூர் பண்ருட்டி , நெய்வேலி மக்கள் மீளமுடியாமலும் அடிப்படை  வசதியின்றியும்  தவிதவித்து வருகின்றனர். இந்த பாதிப்பின் தன்மையையும் கோரத்தையும் முப்பது நிமிட பயணத்தில் அறிந்து கொண்டார் (?) நம் முதல்வர் .

இதில் இன்னுமொரு விஷேச செய்தி இப்போது அமைச்சராக பதவி ஏற்கவிருக்கும் திரு.சிவபதி ஏற்கனவே, அமைச்சராக இருந்து பின் நீக்கப்பட்டவர் , அவர் நீக்கப்பட்டதன் தகுதி குறைவென்ன ?  சேர்க்கப் பட்டதென் தகுதி நிறை என்ன? யாரும் அறியார் . மாற்றம் ஒன்றே மாறாதது சரிதான் ஆனால் மாறிக்கொண்டே இருப்பது ஒரு நிலையான நல்லாட்சியின் அறிகுறியல்லவே ?  

களை எடுத்தல் அவசியம்தான் ஆனால் களைஎடுத்தலே விவசாயம் (நிர்வாகம்)  அல்ல , இன்னும் இதில் விதைதவரின் தவறும் இருக்கிறது. சிறந்த விதையை விவசாயி தேர்ந்தெடுப்பதைப் போலே நல்ல அமைச்சரவை சகாக்களை தெர்தெடுப்பதும் முதல்வரின் முதல் கடமை , இனியாவது இவர்களாவது நிலைத்திருக்கட்டும்.    

அன்பன் 
ARR

Wednesday, 18 January 2012

அன்னா ஹசாரே காகித காந்தியா ??? பெரிய பூஜ்ஜியமா ???

                          சமீப காலமாக எல்லோராலும் உச்சரிக்கபடும் ஒரு பெயர் அல்லது நம்பிக்கை வார்த்தை அன்னா ஹசாரே, இந்தியாவின் தலை எழுத்தையே தலை கீழாக மாற்றும் சக்தி கொண்ட மாமனிதராக மீடியாக்களாலும் அவரது ஆதரவாளர்களாலும் உருவகப் படுத்தப் பட்டவர், இன்று மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக தன்னை நிலைப் படுத்திக் கொண்டுள்ளாரா என்று பார்த்தால் அவர் அதில் தோல்வி அடைந்தவராகவே என்னால் அறியப்படுகிறார். 


                         தன்னை காந்தியவாதியாக மக்களின் முன் காட்டிக்கொள்ளும் அன்னா தன்னை முழுமையான காந்தியவாதியாக நிலை நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை என்பதே என் பதில் , தன் ஊரில் குடிப்பவர்களை மரத்தில் கட்டி அடிப்பேன் என்று கூறிய போதே அவரின் அகிம்சை அழிந்து போனது , இன்னும் சற்று விரிவாக அரசியல் ரீதியாக இவரின் செயல்பாடுகளைப் பார்த்தோமேயானால் , இத்தனை ஊழல்களுக்கு பிறகும் மக்கள் விரோத செயல்களுக்கு பிறகும் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக்கம் இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதற்கு காரணங்கள் 
  • சுதந்திர போராட்டத்தின் காரணியான கட்சி 
  • கதராடையும் காந்தி குல்லாவும்
  • தேசியக்கொடி மாதிரியான கட்சிக் கொடி
  • காந்தியம்....................... இவை அனைத்தையும் பின்பற்றாவிட்டாலும் தன் முழுமையான சொத்தாக பாதுகாத்து வருவதுதான்  
           இதை கைபற்ற முடியாமல் போனவர்களின் ஊதுகுழலாக இவர் செயல் பட்டு இருக்கலாம் என்பது என் எண்ணம் . நான் முன்னமே என் பதிவில் பதிந்த படி ஐரோம் ஷர்மிளாவிற்கு கொடுக்காத முக்கியத்துவத்தை அன்னா ஹசாரேவிற்கு கொடுப்பதன் வியப்பை வெளிப்படுத்தி இருந்தேன் , ஏனெனில் ஊழலை அழிப்பதை விட உரிமையை பெறுவது மிக முக்கியம் இன்னும் அவசியம்.  

         ஜனநாயகத்தை பற்றி பேசும் இவரின் குழுவினரே அன்னாவின் மீதான தனி மனித துதியை தொடங்கியதுதான், இதற்கு அடையாளமாக பல நிகழ்வுகளை சொல்லலாம். இதற்கு சாட்சியாக கீழ் உள்ள படத்தைக் கொள்ளலாம்.
  

         ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனாலும் ஊழல் என்பது காங்கிரஸ் காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல லோக்பால் மசோதா முழுமையாக நிறைவேறாமல் போனதற்கு காரணம் அவர்களே, காங்கிரஸ் காரர்களே என் முதல் முழு எதிரி அவர்களை எதிர்த்து ஐந்து  மாநிலங்களிலும் களம் காணுவேன் என்று சொல்லியதும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கேள்விகளை தவிர்த்து புறக்கணித்ததும் பூனைக்குட்டி வெளியே வந்த கதையைத்தான் நினைவுப் படுத்தியது. 

        அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவரா இல்லை மற்றக் கட்சிகளின்   ஊதுகுழலானவரா என்பது அவரின் கடந்த கால செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இனிவரும் காலங்கள் அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்தே தெரியவரும்.    

அன்பன் 
ARR

Friday, 13 January 2012

சசிகலாவின் நீக்கமும்? அதன் காரணமும்?

இது எல்லோரும் எழுதி தீர்த்த விஷயம் தான் என்றாலும் எனக்கு இதில் மற்றவர்களைவிட சற்றே கூடுதலான உரிமை உண்டு காரணம் நான் மன்னையின் மகன் என்பதால்.............



                               சசிகலாவின் நீக்கத்தின் நோக்கம் இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது , அதன் காரணத்தை இன்றுவரை ஜெயலலிதா சொல்லவில்லை , அது அவசியமா இல்லை அவரின் தனிப்பட்ட விஷயமா என்று பார்த்தோமேயானால் ஜெ அவரை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றி இருந்தால் அது அவரின் தனிப்பட்ட விஷயம் ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பாக சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சியை விட்டு வெளியேற்றும் போது அதற்கான காரணத்தை, அவர் அவரின் தொண்டர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும் ஆனால் வழக்கம் போலவே இதிலும் மர்மம், மௌனம் 

அதோடு சேர்த்து இதுவரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏற்பட்ட குற்றங்களுக்கும் , ஊழல்களுக்கும் , தவறுகளுக்கும் சசிகலாவே முழு பொறுப்பு என்பது மாதிரியான செய்திகள் பத்திரிக்கையின் வாயிலாக பரப்ப படுவது சரியல்ல என்பது என் கருத்து , அதே வேளையில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கமும் , அராஜகமும் அந்த கட்சியில் இல்லை என்று சொல்லவோ அதை நியாயப்படுத்தவோ இல்லை இந்த பதிவு , ஆனால் அந்த தவறுகளுக்கு ஜெயலலிதாவும் பொறுப்பு என்பதுதான் என் கருத்து. 

                                      
                                       இதில் ஜெயலலிதாவிற்கு பொறுப்பு இல்லை சசிகலாவே முழு காரணம் என சொன்னால், ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவி , மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் பதவில் இருப்பவர் சசிகலா என்ற ஒற்றை மனுஷிக்கு அடிமையாக இருந்தார் என்றல்லவா அர்த்தம், இதற்கு முன் சசிகலாவை பற்றியும் அவர்தம் குடும்பத்தை பற்றியும் யாரும் குறை கூறவோ குற்றம் சொல்லவோ இல்லையா என்ன ? அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் வந்ததென்றால் அதன் காரணம் என்ன ?. அதற்கான காரணம் பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கும் அதன் பின் இடப்பட்ட திட்டங்களும் என்றால், மற்றவர்களுக்கு பங்கம் என்றால் அமைதியாக இருக்கும் ஜெயலலிதா தனக்கு ஆபத்து என்றால் ஆவேசப்படும் சுயநலவாதியா என்ன ?

                                                இதுநாள் வரை சசிகலா பெற்ற பயன்களை அவரின் தவறுகளை சொல்பவர்கள் ஜெயலலிதா விற்காக அவர் பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் பட்டியலிடாததேன்?என்னமோ சசிகலாதான் எல்லாக் குற்றங்களையும் செய்தவர்மாதிரியும் ஜெயலலிதா தவறே செய்யாதவர் மாதிரியும் மாயையை உருவாக்குவது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை , அப்படியே இது உண்மையாக இருந்தாலும் அவரின் தவறுகளை தடுக்காது இருந்த ஜெயலலிதாவும் குற்றம் செய்தவர்தானே ? அதை சசிகலா வை குறை சொல்பவர்கள் வசதியாக மறந்ததேன் ? 


 சசிகலா மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நீக்கத்தால் ஜெயலலிதாவின் தவறுகளை மறைக்க முடியாது, என்பதே என் கருத்து, இது அரசியலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியதே தவிர வேறு எந்த மாற்றமும் மக்களுக்கு நிகழ்ந்து விடப்போவதில்லை. இதற்கு ஜெயலலிதாவின் புயல் நிவாரண கடலூர் ஹெலிகாப்டர் பயணமே சாட்சி , இதைப் பற்றி பின்னொரு பதிவில் .    

                               இந்த பதிவை ஒரு மாற்று கருத்திற்காகவும், என்னுடைய மனதில் தோன்றிய கேள்விகளுக்காகவும் பதிந்தேனே அன்றி இன்றுவரை நான் மன்னார்குடியில் இருந்து வந்திருந்தாலும் அவரின் குடும்பத்தினருடன் ஒரு வினாடி தொடர்பும் இல்லாதவன் , இந்த பதிவை படித்து நான் அவர்தம் குடும்பத்தால் பயன் பெற்றவனாக நீங்கள் கருதினால் நான் பொறுப்பல்ல .
                                         நன்றி !

அன்பன் 
ARR                     

Tuesday, 25 October 2011

சென்னை மழை





2 நாள் மழைக்கே சென்னை தொன்னை போல் தண்ணீரை தேக்கி 
நிற்கிறது.

இண்டு இடுக்கு சந்து பொந்து

பிரதான சாலை குறுக்கு சாலை

புது ரோடு பழைய ரோடு

எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது

நீர், நம் நாட்டு ஊழலைப் போலே


இந்த லட்சணத்தில்

வார்டு உறுப்பினராம்

சட்டமன்ற உறுப்பினராம்

மாநகர மேயராம்

நாடாளுமன்ற உறுப்பினராம்

ஆனால் யாருமே இல்லை நல்லது செய்ய


நல்லரசு அமைக்க முடியாத இவர்களா

வல்லரசு ஆக்கப் போகிறார்கள்

அல்லாடும் மக்களை

பந்தாடும் பாவிகளே

கொள்கை எல்லாம் போதும்டா

கொள்ளை அடிச்சிட்டு போங்கடா...........







அனைவருக்கும் இனிய தீபாவளி நல் 


வாழ்த்துக்கள் 

அன்பன்

ARR

Thursday, 21 July 2011

தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதி மன்றம்.






அவசரத்தில் அள்ளிதெளித்த அரைவேக்காட்டுத்தனமாக அறிவித்த சமச்சீர் கல்வி தடை இன்று பல பகீரத முயற்சிகளுக்குப் பின் உச்ச நீதி மன்றத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது.இந்த மனு தொடர்பாக இன்று விசாரித்த ஜே.எம்,. பாஞ்சால் தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகள் , சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

            அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த தடை ஏற்படுத்தி இருக்கும் இழப்பு எவ்வளவு  தெரியுமா ??, மக்களின் வரிப் பணத்தில் புத்தகங்களுக்காக குறைந்த பட்சம் இருநூறு கோடி, இதனிலும் அதிகமாக நீதிமன்றத்தில் வாதாடியவர்களுக்கான கூலியும் , மற்றவர்களுக்கான போய் வந்த பொய் செலவுகளும் . இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல ஒண்ணே கால் கோடி மாணவர்களின் அறுபது கல்வி நாட்கள் , இதற்கு  என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அரசு , ஜெயலலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்ப் பார்த்த மக்களுக்கு இந்த மாதிரியான செயல்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லைஎதில் தான் அரசியல் செய்வது என்ற அடிப்படை நியாம் கூட இல்லாத அரசுகள் அமைவதும் , அவற்றையே நாம் மீண்டும் சுழற்சி முறையில் தேர்தெடுப்பதும், தமிழக மக்களின் சாபக் கேடு .  

அன்பன் 
ARR

Monday, 18 July 2011

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் திருந்தாத தமிழக அரசு

                              

                           சமச்சீர் கல்வியே தொடரவேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது திரிசங்கு சொர்க்கத்தில் அல்லாடும் பாவப்பட்ட தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூணுகால் என்ற வறட்டு பிடிவாதத்தை தமிழக அரசு இந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்யப் போவதாக கூறி நிரூபணம் செய்திருக்கிறது.

             இன்று சமச்சீர் கல்வி மீதான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதி மன்றம்  1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியே தொடரும்,மேலும் அனைத்து வகுப்புகளிலும் நடப்பாண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும். வரும் 22ந் தேதிக்கு சமச்சீர் கல்வி பாடநூல்களை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இன்று தேதி பதினெட்டு இன்னும் நான்கு நாட்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வியை நிர்ணயம் செய்யும் பாட புத்தகங்களை வழங்குவது குதிரை கொம்பான விஷயம் அதையும் தாண்டி பெரும்பாலான பள்ளிகளுக்கு பழைய பாட திட்ட புத்தககங்களை விநியோகித்து வருவதாகவும் செய்திகள் வந்தபடியே இருந்தன.இவை அனைத்தையும் தாண்டி சமச்சீர் பாட புத்தகங்கள் மாணவர்களை சென்றடையுமா என்பது விடை தெரியாதா கேள்வி.



                      ஏன் இந்த மாதிரியான பிடிவாத செயல்கள் என்பது யாருக்கும் புரியாத மர்மமாகவே இருக்கிறது. இவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மாணவர்களின் படிப்பையும் அவர்களின் எதிர்காலத்தையுமா பாழாக்குவது , இதுவா ஒரு பொறுப்புள்ள அரசின் அடையாளம் ?. இப்போதே 50 நாட்களை இழந்து நிற்கின்றனர் மாணவர்களும் ஆசிரியர்களும் , சரியான நேரத்தில் தொடங்கி பாடம் நடத்தினாலே புரியாத நம் மாணவர்கள், இப்போது பாடங்களை நடத்தி முடிக்க அவசரம் காடும் ஆசிரியர்களின் வேகத்துக்கு எப்படி ஈடு கொடுக்க போகிறார்கள் .

                   அடுத்து, மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் பாட வழி புத்தகங்களே வழங்கப்பட்டு இருக்கிறது. இப்போது சமச்சீர் கல்வி என்றால் அந்த பாடப் புத்தககங்களின் கதி என்ன? புதிய  பாட புத்தகங்களுக்கு மீண்டும் பெற்றோர்கள் பணம் செலுத்த வேண்டுமா?. ஒரு தரமான பள்ளிபடிப்பை மாணவர்களுக்கு தர வக்கில்லாமல் கல்வியை தனியாரிடம் தாரை வார்த்த தமிழக அரசுகள் இப்போது இப்படி மாணவர்களின் எதிர்காலத்தில் சதிராட்டம் ஆட எந்த தகுதியும் கிடையாது .

                     இது மாதிரியான கேவலமான செயல் எந்த மாநிலத்திலும் நடக்காது . இதுவே தமிழர்களின் தலைவிதி.மக்களின் குடி கெடுக்கும் மது விற்பனையில் எந்த தடையையும் ஏற்படுத்தாத தடுக்காத அதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டாத அரசுகள் , அவர்களின் அரிப்பை தீர்த்துக்கொள்ள எதிர் கால இந்தியாவை வழிநடத்தப் போகும் இந்த தளிர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது துளியும் நியாயமில்லை.      

அன்பன் 
ARR      

Monday, 11 July 2011

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

 
                      சென்ற ஞாயிற்று கிழமை ஏதேச்சையாக சூர்யா சேனலில் மலையாள படம் டுவன்டி : டுவன்டி (twenty :20) பார்த்தேன், பிரமித்தேன் மலையாள படவுலக அத்தனை பிரபலங்களும் பிரகாசமாய் நடித்திருக்கும் படம், மோகன் லால் ,மம்முட்டி ,சுரேஷ்கோபி ,திலீப் ,ஜெயராம் , இன்னும் எனக்கு பெயர் தெரியாதா பிரபலங்களும் நடித்திருந்தனர், ஒருவருக்கொருவர் துளியும் ஈகோ இல்லாமல் (இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் ) தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தனர்.



           அதிலும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒரே திரையை பகிர்ந்து , படர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடித்தது மலையாள ரசிகர்களுக்கு விருந்தாக  இருந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அவரவர் நடிப்பிற்கு ஏற்ற கதாப் பாத்திரங்களை அமைத்திருந்தார்கள், இந்த நல்ல முன்மாதிரி படங்கள் ஹிந்தியிலும் வருகின்றன.,  .

           இதே போல் இங்கு தமிழ்நாட்டில் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்தால்  எப்படி இருந்திருக்கும் , இருவரையும் ஒருங்கே ஒரே திரையில் பார்க்கும் போது தமிழ் ரசிகனின் உணர்வுகள் எப்படி இருக்கும், இருவருக்குமான , கதையை எழுதவோ தயாரிக்கவோ முடியாதவர்களா என்ன ? நம் கதாசிரியர்களும்  தயாரிப்பாளர்களும். தியாகராஜ பாகவதர் , பி யு சின்னப்பாவில் தொடங்கி , எம் ஜி ஆர்/ சிவாஜி , ரஜினி/கமல் , அஜித்/விஜய் இன்று வந்த தனுஷ் /சிம்பு வரை தொடரும் இந்த உருவாக்கப் பட்ட கலாச்சாரம் என்று மாறும், நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் சினிமாவும் காலமும் எப்போது வரும்.
           இன்னும் கொஞ்சம் விளக்கமாக கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ரசிகர்களுக்கிடையே சண்டை வரும் , பிரச்சனை வரும் என்ற உப்பு பெறாத காரணங்கள், ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர்களா , இவர்களாகவே தன் சுய நலத்திற்க்காக ரசிகர்களுக்கு வெறி ஏற்றிவிடுவது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் . இரு ரசிகர்களும் பரம்பரை பகை கொண்டவர்களா என்ன?, ஒரே குடும்பத்தில் அண்ணனும் தம்பியும், ஒரே தெருவில் நண்பர்களும் வேறு வேறு நடிகர்களை ரசிப்பதனால் அவர்களுக்குள் பிரச்சனை, விரோதம் என அர்த்தமா என்ன , ரசிகர்களை வெறியர்களாக சித்தரிக்கும் இவர்களின் செயல் எப்படிப் பட்டது என்று ரசிகர்கள் உணரவேண்டும். நடிகர்களும் தங்களின் ஈகோவை விட்டுவிட்டு இதுமாதிரியான படங்களில் இணைந்து நடிக்கவேண்டும், இவர்கள் நடிக்க தயார் என்றால் இயக்குனர்கள் தரமான கதையுடன் வரிசைகட்டி நிற்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை, அது ரசிகர்களுக்கும் விருந்தாகும் என்பது ஓர் ரசிகனாய் என் கருத்து.


அன்பன் 
ARR