Showing posts with label என் மகள். Show all posts
Showing posts with label என் மகள். Show all posts

Tuesday, 29 November 2011

மழலைகள் உலகம் மகத்தானது - தொடர் பதிவு



மழலைகள் உலகம் மகத்தானது என்ற மகோன்னத தொடர் பதிவை என்னை தொடர அன்பு கட்டளையிட்ட மதிப்புக்குரிய அய்யா திரு.வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களின் உத்தரவை ஏற்று நான் எழுதிய பதிவு இது...........




                      மழலைகள் உலகம் மட்டுமல்ல மழலைகள் உள்ள உலகமும் கூட மகத்தானதுதான். சரி மழலைகள் உலகம் மகத்தானது என்பதன் காரணத்தை அறிய முற்படுகையில் அந்த அற்புத உலகத்தில் தான் போட்டி, பொறாமை, குரோதம்,துரோகம், என்ற எந்த கீழான எண்ணங்களும் அவர்களிடத்தே இல்லை.சலனமே இல்லாத நிதர்சனமான உள்ளம் அது. சந்தோஷமோ, சோகமோ உடனே வெளிப்படுத்திவிடும் மழலைகளின் உலகம் மகத்தானதாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருந்துவிட முடியும்.


                      என் வாழ்க்கையில் இன்னும் என் குடும்பத்தில் பல மழலைகளைப் பார்த்திருந்தாலும், நான் ரசித்த இரு மழலைகளைப் பற்றியே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.




1. என் சின்ன அண்ணன் மகள்: கமலகிருஷ்ணவி 


                     எங்கள் குடும்பத்தில் சரியாக 35 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை அவள். அதற்கு முன் எங்கள் அம்மா அப்பாவிற்கு 8 பேர பசங்க இருந்தாலும் ஒரு பேத்தி இல்லையே என்ற குறை குறைக்க வராது வந்த மாமணி போல் வந்த தேவதை அவள். பேர பசங்களின் கடா முடா விளையாட்டுக்களையே பார்த்த நாங்கள் இவளின் அமைதியான விளையாட்டுக்களால் மனம் மகிழ்ந்து போனோம், அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தின் நிதி நிலை சரியில்லாத கவலையை அகற்ற வந்த அகல்விளக்கு அந்த பாப்பாகுட்டி.


2. என் மகள்: கமலாத்மிகா


                என்னையும் என் எழுத்தையும் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும் என் மகளை நான் பெற பட்ட வேதனைகள், ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் வெவ்வேறு பிரச்சனைகளை சொல்ல, மனம் நொந்து மருத்துவமனையில் இருந்த என் மகளை பார்க்க போகும் போதெல்லாம், என்னை வரவேற்பது போல சின்ன கை, கால்களை ஆட்டி அந்த மணியான காந்த கண்களால் பார்க்கும் பார்வை ஒராயிரம் இடிகளையும் ஒருங்கே தாங்கும் சக்தியை தரும். 


               நம் உருவத்தையும், நம்மவர்களின் உருவத்தையும் செயல்களையும் அவர்களின் வழியே காணும் போது நாம் பெரும் இன்பம் எதற்கும் ஈடாகாது.
நம் சந்ததிகளின் வழியே நம் சாயல்களை நம் மழலைகளின் வழியே காணும் போது அந்த ஆண்டவனின் படைப்பையும் அதன் ஆச்சர்யத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.


மழலைகளின் உலகம் மகத்தானது மட்டும் அல்ல, மகத்துவமானது இன்னும் மகோன்னதமானது.






அன்பன்
ARR.

Monday, 14 November 2011

குழந்தைகள்........ வாழ்வியலின் வண்ணங்கள்




குழந்தைகள்........

வாழ்வியலின் வண்ணங்கள்


வாழ்வியலின் வசீகரங்கள்


வாழ்வியலின் வசந்தங்கள்



வாழ்வியலின் வடிகால்கள்

வாழ்வியலின் வடிவங்கள்


வாழ்வியலின் விழுதுகள்


வாழ்வியலின் அற்புதங்கள்


வாழ்வியலின் அஸ்த்திவாரங்கள்


வாழ்வியலின் அர்த்தங்கள்


வாழ்வியலின் முழுமைகள்



வாழ்வியலின் மகிமைகள்

வாழ்வியலின் தத்துவங்கள்


வாழ்வியலின் மகத்துவங்கள்

இன்னும்


இது போல் எத்தனையோ

இந்த குழந்தைகள் தின நாளில்

குழந்தைகளாய் இருப்பவர்களுக்கும்


குழந்தைகளாய் இருந்தவர்களுக்கும்


மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்



அன்பன் 
ARR

Friday, 8 July 2011

ஒற்றைக் குழந்தை, கற்றைக் கேள்விகள்


நேற்று நான் படித்த எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு? என்ற அமைதி அப்பாவின் பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் படித்தவுடன் என் மனதில்   தோன்றிய செய்திகளை இங்கே பதிய நினைக்கிறேன், படித்து  உங்களின் அனுபவக் கருத்துக்களை கூறினால் மகிழ்ச்சியடைவேன்.

     இந்த காலத்தில் ஒரு குழந்தை  பெற்றுக்கொள்வதே சாமர்த்தியம், புத்திசாலித்தனம் , யதார்த்தம் என பலவிதமாக சொல்லப்பட்டாலும், ஒரு குழந்தை பெற்றால் நல்ல முறையில் வளர்க்க , படிக்க,செலவழிக்க எதுவாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் , இன்னும் பல சாதகங்கள் பட்டியலிடப்பட்டாலும் , அந்த குழந்தையை சார்ந்து யோசித்தோமேயானால் அது ஆரோக்கியமானதா என்பதே எனது கேள்வியாக எழும்பி நிற்கிறது.

       எனக்கும் சரி என் நண்பர்கள் பலருக்கும் (90%) ஒரே குழந்தைதான், அதற்கான காரணம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது , ஆனாலும் இனி குழந்தை இல்லை என்பதில் மாற்றம் இல்லாதிருக்கிறோம், என்னுடைய காரணம் என் முதல் மகளை தொட்டுப் பார்ப்பதற்கே நான் பட்ட கஷ்டம் என் முன்னைய பதிவுகளில் தெரிவித்திருந்தேன், என் மகளை ஆரோக்கியமாக வளர்ப்பதே  என் வாழ்வின்  லட்சியமானதால் அடுத்த குழந்தையைப் பற்றிய சிந்தனை எனக்கு இல்லாமல் போனது.

      ஆயினும் இன்று நான் ஒரு குழந்தையாக இருப்பவர்களின்  பிரச்சனையாக கருதுவது தனிமை,அடம் , பகிரும் மன நிலை இல்லாமல் இருப்பது, இன்றைய தனிக் குடித்தனங்களில் அவரவர் தனிமையிலிருந்தாலும் குழந்தைகள் இணைந்து தான் இருக்கிறார்கள் ஆனாலும் எல்லாவற்றிலும் தனக்கே முதலிடமும் முக்கியத்துவமும் தரவேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி நிற்கிறது , காரணம் வீட்டில் தனிக்காட்டு ரா(ணி)ஜாவாக இருப்பதால் எல்லா இடத்திலேயும் அதே உணர்வு , அது மறுக்கப்படும் போது ஆரம்பிக்கிறது பிரச்சனை , விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை சிறிதளவும் இல்லாமல் இருக்கிறது.வீட்டிற்க்கு வந்தவுடன் தனிமை ஆட்கொள்கிறது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள்.வாழ்வியலின் அதிமுக்கிய விதியான விட்டுக் கொடுத்தலை இந்த மாதிரியான குழந்தைகள் இழந்து விடுவார்களோ என அஞ்சுகிறேன் 


   தனக்கு தெரியாததை சொல்லித்தர , தன்னை பரிவாக பார்த்துக்கொள்ள,
பகிர்ந்து கொள் 
ஒரு சகோதரத்துணை  அவசியம் என நான் இப்போது நினைக்கிறேன், ஏனென்றால் எங்கள் வீட்டில் நான்தான் சின்னவன் , மூன்று அண்ணன் , இரண்டு அக்கா , இந்த அனைவருக்குமே  நான்தான் முதல் குழந்தை, வீட்டில் நாங்கள் விளையாடாத விளையாட்டில்லை,

எனக்கு நீந்த கற்றுதந்ததும் , சைக்கிள் ஓட்ட கற்றுதந்ததும் என் சகோதரர்கள் தான். 
என்னை அனுசரிக்கும், அரவணைக்கும் அவர்களின் பாங்கு அலாதியானது, இன்றும் என் இன்ப துன்பங்களை நான் பகிரும் முதல் இடம் என் உடன் பிறந்தவர்கள்தான் , அவர்களிடம் சொன்னால் இன்பம் இரண்டு மடங்காகவும் , துன்பம் பாதியாகவும் குறைந்து விடும் .என் தாய் தந்தையை இழந்த எனக்கு இன்று அவர்கள் தான் என் தாய் தந்தை அவர்களிடம் கண்ட, கற்ற  விட்டுகொடுக்கும் பண்புதான் இன்று எனக்கு நிறைய நண்பர்களைத் தந்திருக்கிறது, இதையெல்லாம் நினைக்கும் போது இதுமாதிரியான சொந்தத்தை, அன்பை , பண்பை என் மகளுக்கு மறுத்துவிட்டேனோ என்று நினைக்கிறேன்.





 இதைச் சார்ந்த உங்களின் கருத்துக்களை பகிர்ந்தால் மனம் நிறைவடைவேன்.
நன்றி 

அன்பன் 
ARR  

Sunday, 5 June 2011

என் மகள்


என் செல்ல குட்டி தேவதை - இவள் 
செய்யும் சுட்டியெல்லாம் தேன்வதை 



தாயை இழந்த எனக்கு - ஆண்டவன் 
தொடங்கிய புது கணக்கு 



பூப்போலே புன்னைகைக்கும் புதுமலர் - அவள் 
பிராத்தனையில் துளிர்விட்ட அன்புஅலர்



என்வாழ்வுக்கு அவளே அர்த்தம் - தருவேனென் 
பாசத்தை அவளுக்கு மொத்தம் 



என் உயிரின் ஒளியவள் - என்னை 
நேசத்தால் செதுக்கும் உளியவள் 



மழலைபேசி மயக்கும் தந்திரம் - நான்
அறிந்தேவீழும் அன்பு மந்திரம் 



அச்சாய் என்அன்னையின் அம்சம் - அவளால்
பெருமைபெறட்டும் என் வம்சம்   

அன்பன் 
ARR