Saturday 16 April 2011

தமிழக மீனவர்கள் படுகொலை எனும் கொடூரம்

தமிழக மீனவர்கள் படுகொலை எனும் கொடூரம் 



         தமிழகமீனவர்களின் படுகொலைகளை பற்றி பல கட்டுரைகளும் கருத்துக்களும் வந்தாலும் , அதற்க்கு பல அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும் (கட்சதீவு, கடற்பரப்பை உலக மயமாக்கல்) ஒரு சராசரி தமிழனாய், இந்தியனாய் அல்லது குறைந்த பட்சம் ஒரு சக மனிதனாய் என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கே எழுதுகிறேன் .
        தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. கடந்த 30 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படையினர், சர்வதேச கடல் பரப்பிலும், இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயும் நுழைந்து, அங்கு மீன் பிடிக்கின்ற தமிழக மீனவர்களின் வலைகளை அறுப்பதும், படகுகளை உடைத்து நொறுக்குவதும், தமிழக மீனவர்களின் ஆடைகளைக் களைந்து கடலுக்கு உள்ளே தூக்கி வீசுவதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி விட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தச் சம்பவங்கள், வாரம் தவறாமல் நடக்கின்ற கொடுமை ஆகி விட்டது.


    இதுவரை ஐநூறு மீனவர்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரம் சொல்லுகிறது , இந்த புள்ளிவிவரம் சொல்லா விவரம் எவ்வளவு என தெரியாது , இந்த ஐநூறு மீனவர்களின் உயிர் மட்டுமல்ல இதுவரை இலங்கை கடற்படையினரால் கை , கால் , கண் இழந்து நடை பிணமாய் இருப்பவர்கள் எத்தனையோ  பேர். இவர்கள் செய்த குற்றம் தான் என்ன?  தானும் தன மக்களும் உயிர் வாழ இந்த கடலை தேர்ந்தெடுத்ததா இல்லை இந்தியாவில் தமிழனாய் பிறந்ததா ?என்ன கொடுமை இது உரிமை இருந்தும் உறவுகள் இருந்தும் அனாதைகளை போலே அடித்து துவைத்து , அவமானப்படுத்தப்பட்டு , தந்தையுடன் மகனையும் , தம்பியுடன் அண்ணனையும் தகாத உறவு கொள்ள செய்து அவர்களை அவமானத்தில் கூனி குறுக செய்து கொலை செய்ய , என் சக இந்திய மீனவர்கள் யாரும் இல்லா அனாதைகளா , நூற்றி இருபது கோடி சகோதர இந்தியர்களை கொண்ட இந்த மீனவன் இரண்டே கோடி மக்களை கொண்ட அற்ப மனிதர்களால் இப்படி வேட்டை ஆடப்படுவது என்னே கொடுமை , நாதியற்ற மனிதர்களா இவர்கள்.

        ஒரு மீனவனின் இறப்பு நமக்கெலாம் செய்தி, ஆனால் அவன் குடும்பத்திற்கு ஒரு தலைவனின் , ஒரு பாசமுள்ள தகப்பனின், பரிவுள்ள  கணவனின், அக்கறையுள்ள சகோதரனின் இழப்பு, நம்மில் எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறோம் இந்த இழப்பை. இதை சரி செய்ய என்ன செய்யப்போகிறோம்?, பதிலில்லை  நம்மிடம், வெறுமையாய் பொறுமையாய் நிற்கிறோம்.

  ஊழலை எதிர்க்க அன்ன ஹசரேவுக்காக மெரினாவில் மெழுகுபத்தி ஏந்திய நாம் இதுவரை நம் மீனவர்களுக்காக ஒரு தீக்குச்சியை ஏற்றி இருக்கிறோமா நண்பர்களே? அதற்காக அந்த செயலை நான் தவறென்று சொல்லவில்லை அது நம் அவசியம் ஆனால் இது அத்தியாவசியம். இதற்கு நான் குற்றம் சாட்டுவது நம் ஊடகங்களைத்தான், அவர்களுக்கு முக்கியம் டி ஆர் பி ரேட்டிங் மட்டும் தான் நாமல்ல , எத்தனை பத்திரிக்கைகள் அல்லது ஊடகங்கள் இந்த பிரச்னைக்கு தொடர்ந்து முக்கியத்துவமும் குரலும் கொடுத்து வருகின்றன.நாம் நம்மையும் நம் உணர்வுகளையும் ஊடகங்களின் ஊடே வழி நடத்துகிறோமோ என்ற சந்தேகம் எனக்கு 

        நம் இந்தியா மும்பையுடன் முடிந்து விடுகின்றதா என்ன? , மும்பை படு கொலைக்கு பின் பாகிஸ்தானுடன் குறைந்த பட்சம் கிரிக்கெட் தொடர்பை அறுத்த நாம் , இன்றுவரை இலங்கையுடன் தொடர்பு    கொண்டிருப்பது ஏன்?, இன்று அத்தனை இந்தியர்களும் பார்த்து ரசித்து வரும் ஐ பி எல் இல் ஒரு பாகிஸ்தான் வீரரும் இல்லை ஆனால் என் மீனவனின் குடி கெடுத்த இலங்கையை சேர்ந்த பதினோரு பேர் இங்கே விளையாடுகிறார்கள் அதில்  இரண்டு பேர் இரு அணிகளின் தலைவர்கள் , மும்பை இந்தியனின் உயிருக்கு ஒரு நியாயம் , ராமேஸ்வரம் இந்தியனின் உயிருக்கு ஒர் நியாயமா? தெரிந்தால் நீங்களாவது விளக்கம் சொல்லுங்கள் எனக்கு

இந்தியா மூன்று பக்கமும் கடலால் சூழ பட்டுள்ள தீபகர்ப்பம் ஆனால் எந்த மாநிலத்து மீனவனுக்கும் நேராத  கதி நம் தமிழ் மீனவனுக்கு மட்டும் நேர்வதன் காரணம் என்ன ? நம் மீனவர்களின் உயிர் மத்திய  அரசால் அலட்சிய படுத்தப்படுகிறதா ?, நம் அண்டை மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லையை தாண்டினால் கூட  பத்திரமாக திருப்பி அனுப்ப படுகின்றனரே, ஏன் என் தமிழனுக்கு மட்டும் இந்த இழிநிலை?.    
  

       இதெற்கெல்லாம் காரணம் என்ன? நாம் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்காததும் , நம் உணர்வுகளை பிரதிபலிக்காததும் தான். யாருக்கோ எங்கோ நடப்பதாக நாம் எண்ணுவதும் அல்லது மற்றவர்களால் நம்பவைக்கபடுவதும்தான். நம் வாழ்க்கை நமக்காக வாழ்வதோடு மட்டும் முடிந்து விடவில்லை , நம் சமுகத்திற்க்காகவும் அதன் முன்னேற்றத்திற்கும் பயன்படல் வேண்டாமா?. இதுவரை நம்மில் பலபேர் இந்த பிரச்னையை உணர்வு பூர்வமாக அணுகவேயில்லை, அது நம்மில் செய்தியாகத்தான் செலுத்தப்பட்டிருக்கிறது.நம்மிடையே உணர்வும் இல்லை ஒற்றுமையும் இல்லை காரணம் அரசியல்வாதிகள். பக்கத்து மாநிலங்களில் கொள்கையால் கட்சியால் வேறு பட்டு இருந்தாலும் மக்களுகென்றால் வேற்றுமை மறந்து ஒன்று படுகிறனர் , ஆனால் நம்மவர்கள் என்னவென்று சொல்லுவேன் ????????????. இனி அந்த அரசியல்வாதிகளை  நம்பி பயனில்லை...........   

அந்த மாற்றம் இனி நம்மில் இருந்தே தொடங்கட்டும், 
இலங்கையின் கொட்டம் அடங்கட்டும்,
மீனவர்களின் வாழ்வு மலரட்டும் . 


அன்பன் 
ARR    


பட உதவி :pagalavan.in / http://inioru.com

2 comments:

Unknown said...

அனைவரது எண்ண ஓட்டங்களையும் சரியாக சொல்லி இருக்கிறாய்..இங்கே தொடங்குவதற்கு ஒரு ஆள் வேண்டும் ஹசாரேவை போல்..தரையில் கொன்றான்..இப்போது தண்ணீரில் கொல்கிறான்..கரை தாண்டி வரும் முன் அவன் கொட்டம் அடக்கப்பட வேண்டும்..

A.R.ராஜகோபாலன் said...

உண்மைதான் ஜான்சன் , நமக்கு தீயூட்ட ஒருவர் தேவை, ஆனால் யாரவர் என்பதே கேள்வி?