இந்த பதிவில் ஒவ்வொரு வீரரின் பேட்டிங், பௌலிங் ஸ்டாடிஸ்டிக்ஸ் சொல்லி என்னையும் உங்களையும் வேதனை படுத்த விருப்பம் இல்லை, தனி வீரரைப் பற்றிய விமர்சனமாகவும் இது இருக்காது. தொடரின் துவக்கத்திலேயே இந்திய அணியை காகித புலிகள் என விமர்சனம் செய்திருந்த ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளின் தீர்க்கதரிசனத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் கொஞ்சம் வெறுத்தாலும் இப்போது அதை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை, அவர்களின் தீர்க்கதரிசனத்தை முழுமையான உண்மையாக்கிய பெருமை நமது வீரர்களையே சேரும்.
ஒவ்வொரு இந்தியனின் விளையாட்டு ஆர்வத்தை பல வழிகளில் பயன்படுத்தி அவனின் உழைப்பை உறிஞ்சி பணமாக்கி உலகத்திலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் போர்டாக தன்னை நிலை நிறுத்தி கொண்டிருக்கும் பி சி சி ஐ, இந்த விளையாட்டை முன்னேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த தோல்விக்கு காரணமாக அவர்கள் சொல்லப்போகும் காரணம் அரதபழசான ஆஸ்திரேலியாவின் ஆடுகளம், இது என்ன யாருமே அறியாத ரகசியமா என்ன?, ஒவ்வொரு முறையும் உதை வாங்கி வரும் போதும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், இந்திய அணியின் தரத்தை தாழ்த்தும் பி சி சி ஐ க்கு அறிவோ? அக்கறையோ இல்லாமல் இருப்பதுதான் இதன் காரணம்.
இவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு அதேமாதிரியான ஒரு ஆடுகளத்தை உருவாக்கி இளம் வீரர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கலாம், கூடுதலாக ஆஸ்திரேலியாவிலேயே ஒரு ஆடுகளம் அமைத்து அங்கு நம் வீரர்களை அழைத்து சென்று முன்னாள் சிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம்.பல நாட்டு சிறந்த ஆடுகளம் மாதிரியான ஆடுகளம் அமைத்து பயிற்சி அளிக்கலாம்,இதற்கு மெக்ராத், டொனால்டு, அக்ரம்,வால்ஷ்,போன்றோர்களை பயன் படுத்தலாம் அவர்கள் கேக்கும் தொகைக்கு அதிகமாகவே நம்மிடம் பணம் உண்டு. இது நம்முடைய பேட்ஸ்மேன்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
உள்ளூர் ஐ பி எல் மாதிரியான பிற நாட்டு 20 - 20 ஓவர் போட்டிகளில் நம் அணி வீரர்களை விளையாட அனுமதிக்கவேண்டும், இது அந்த நாட்டு ஆடுகளத்தை அறிய ஒரு வாய்ப்பாக அமையும், அப்படித்தானே நம் நாட்டு சுழலையும்,இந்திய வீரர்களின் பலகீனத்தையும் , மித வேக ஆடுகளத்தையும் ஐ பி எல் மூலமாக வெளி அணிவீரர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
என்னதான் கரடியாக கத்தினாலும் கிரிக்கெட் பார்ப்பதை அதன் ரசிகர்கள் விடப்போவதில்லை, அவர்களும் மாறப்போவதில்லை ( நானும் தான்) இதே இந்திய அணி அடுத்து ஏதாவது ஒரு சிறு வெற்றி பெற்றாலும் கோபம் எல்லாம் வற்றி போய் அவர்களின் புகழ் பாடத்தான் போகிறோம் ஆனாலும் என்னில் பொங்கி வரும் ஆற்றாமையையாவது இந்த பதிவு குறைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு.
அன்பன்
ARR.